Saturday 29 September 2018

புதிய ஓட்டுநர் உரிமம் பெறுபவர்கள் கவனத்திற்கு

ஓட்டுனர் உரிம கட்டணத்தை ‘ஆன்-லைனில்’ செலுத்தும் வசதி நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-வாகனங்களுக்கான பதிவு கட்டணம் மற்றும் வரி ஆகியவை இணையதளம் மூலம் செலுத்தும் வசதி கடந்த 2012-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. பெயர் மாற்றம் செய்தல், உரிமம் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளை இணையதளம் மூலம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான கட்டணம் கணினி வழியாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு மார்ச் 1-ந் தேதி முதல் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களில், ஓட்டுனர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

தற்போது, விண்ணப்பதாரர்கள் ஓட்டுனர் உரிமத்திற்கான கட்டணத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேரடியாக செலுத்தி வருகின்றனர்.பழகுனர் உரிமம், நிரந்தர ஓட்டுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் முகவரி மாற்றம் செய்தல், நகல் ஓட்டுனர் உரிமம் பெறுதல் போன்ற பணிகளுக்கான கட்டணம் முழுவதுமாக மனுதாரர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து ‘ஆன்-லைன்’ மூலம் செலுத்தும் வசதி நாளை (திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. 

இதனை போக்குவரத்து துறை அமைச்சர் தொடங்கிவைக்கிறார்.மனுதாரர்கள் நேரடியாக https://parivahan.gov.in/parivahan/ இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்கான தொகையை ‘ஆன்-லைன்’ மூலம் செலுத்தி பயன்பெறலாம். அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ‘ஆன்-லைன்’ மனுவை பூர்த்தி செய்த பிறகு, அதற்கான கட்டணத்தையும் ‘ஆன்-லைனில்’ செலுத்தலாம்.வங்கி இணைய சேவை (நெட் பேங்கிங்), டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலமாகவும் பண பரிவர்த்தனை செய்யலாம்.

 விண்ணப்பத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை இணையதளம் மூலம் ரசீதை உருவாக்கி அதை அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தலாம்.செலுத்திய பின்பு ஒப்புகை சீட்டு அல்லது பணம் கட்டிய ரசீதுடன் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்று தகுந்த தேர்வில் கலந்துகொண்டு, புகைப்படம் எடுத்து உரிமத்தை பெற்றுக்கொள்ளலாம்.

 இதன் மூலம், கால விரயம் தவிர்க்கப்படுகிறது.மேலும் அலுவலக பணியாளர்களுக்கு பணிச்சுமை குறைந்து, இதர பணிகளில் கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு சிறப்பாக சேவையாற்ற முடியும். போக்குவரத்து துறையின் படிப்படியான முன்னேற்றத்தில் இது ஒரு மைல்கல் ஆகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

மார்கழி மாத விரதங்கள்

மார்கழி மாத முக்கிய விரதங்கள் அறிவோம். மார்கழி மாதத்தில் வழிபாடு என்பது வழி வழியாகத் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் மார்கழி மா...